Monday, December 26, 2016

சளி, இருமல் இதற்கு மூல காரணம் என்ன, அவற்றைப் போக்க என்ன செய்வது

ல்லோருமே சளி, இருமலால் அடிக்கடி அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சளி, இருமல் அந்த அளவுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. இவற்றுக்குத் தீர்வு, நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது. சரி… சளி, இருமல் இதற்கு மூல காரணம் என்ன, அவற்றைப் போக்க என்ன செய்வது என்று பார்ப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.
இளம் மற்றும் நடுத்தர வயதினரிடையே `Functional foods’ என்ற வார்த்தை மிகப் பிரபலமாகிவிட்டது. விதவிதமாக கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவதெல்லாம் இன்றைக்குப் போய்விட்டது. `பி.எம்.ஐ, பி.எம்.ஆர் குறைய என்ன செய்யலாம்?’, `பி.பி கூடாமல் இருப்பதற்கு வழி என்ன?’ என்பதையெல்லாம் கூகுளில் தேடுவது அதிகமாகிவிட்டது. அறிவியலின் நீட்சியும், இணையத்தின் வீச்சும் இதற்கு முக்கியக் காரணங்கள். இதில் எதிர்பாராத ஒரு பக்கவிளைவு, பழைய சமையல் பழக்கம் எல்லாம் சத்தில்லாதது என்கிற பொய் ஜோடனை உருவானதுதான். நம் பாரம்பர்ய உணவுகள் எல்லாமே ஃபங்ஷனல் ஃபுட்ஸ் என்பதுதான் உண்மை. ரொட்டி, கேக், பழத் துண்டுகள் மற்றும் இறைச்சி வகைகளைத் தவிர, பெரிதாக ஏதும் அறியாதது மேற்கத்தியம். தினமும் வைக்கும் நம் குழம்பு, கூட்டு, பொரியலில் இன்றைய அறிவியல் சொல்லும் உணவுக் கூறுகள், இன்னும் முழுமையாகச் சொல்லப்படாத மருத்துவ உண்மைகள் பொதிந்து இருப்பது பலருக்கும் தெரியாது.
எப்போதாவது வரும் சளி இருமல் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலே அதைக் கவனித்துக்கொள்ளும். ஆனால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, காலை எழுந்ததும் அடுக்குத் தும்மல், நெஞ்சில் சளி, அடிக்கடி தொண்டை கட்டிக்கொண்டால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.

சளி இருமல் போக்க என்ன செய்யலாம்? 
* உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், தடியங்காய் (வெள்ளைப் பூசணி), மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்றவற்றை சில வாரங்களுக்குத் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக இவற்றைச் சாப்பிடவேண்டிய சூழல் ஏற்பட்டால், மிளகுத்தூள் தூவிச் சாப்பிடலாம். இதன் மூலமாக சளி, இருமல் தவிர்க்கலாம்.
* பால், தயிர், இனிப்பு மூன்றும் நுரையீரலில் கபத்தை (சளி) சேர்க்கக்கூடியவை. இவற்றையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்க்ரீம் வேண்டவே வேண்டாம். பழங்களில் எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை தவிர மற்றவற்றைச் சாப்பிடலாம்.
மிளகு ஓர் அற்புதமான மருத்துவ உணவுப்பொருள். மிளகின் Immuno Modulating Effect காரணமாக, தும்மல், அலர்ஜியால் வரும் சளி (Sinusitis), ஆஸ்துமாவில் தங்கும் சளிக்கு உடனடியாகவும் நாட்பட்ட பலனையும் அளிக்கும். சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வோர் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம்.
* குழந்தைக்கு இரவில் மட்டும் இருமல் ஏற்படுகிறதா? நான்கு மிளகை எடுத்து தூளாக்கி, ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் உறங்குவதற்கு முன்னர் பருகக் கொடுக்கலாம். இருமல் நீங்கி, இதமான தூக்கம் கிடைக்கும். குழந்தை, வெண்பொங்கலில் இருக்கும் மிளகை பொறுக்கி எடுத்துப் போட்டால் செல்லமாக மிரட்டி சாப்பிட வைக்கலாம்.

* பாசிப் பயறு கொஞ்சம் குளிர்ச்சியானது. குளிர்காலத்தில் இரவில் தவிர்க்கவும். ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள், இரவில் வெண்பொங்கல் சாப்பிடுவதைத் தவிர்த்தால், சளி, இருமல் தவிர்க்கலாம்.
* மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மதியம் சாப்பிடும்போது, மணத்தக்காளி வற்றலை வறுத்துப்போட்டு, முதல் கவளத்தை சாப்பிட்டுவிட்டு, பிறகு குழம்பு, காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
* மோர் சளி தராது. எனவே, அதை தாராளமாகச் சாப்பிடலாம். தயிர்தான் நல்லதல்ல. தயிர் செரிமானத்தை மந்தப்படுத்தும். மோர் சீர்ப்படுத்தும். தயிர் கபத்தை வளர்க்கும். மோர், பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.
* திப்பிலியை இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து தேனில் உணவுக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட்டால் சளி குறையும்.
* காலை காபிக்கு பதில் முசுமுசுக்கை மற்றும் கரிசாலை உலர்ந்த இலைகளைக் கஷாயமாக்கி, பனங்கருப்பட்டி சேர்த்துப் பருகிவந்தால், காலை வேளையில் ஏற்படும் இளைப்பு உடனடியாகக் குறையும்.
* பிரைமரி காம்ப்ளெக்ஸ் நுரையீரல் காசநோய் (Primary Complex – Pulmonary Tuberculosis) இருக்கும் குழந்தைகளுக்கு சத்துமாவு மிக அவசியம். புழுங்கல் அரிசி, பார்லி அரிசி, உளுந்து, கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச்சோளம், முளைகட்டிக் காயவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, முந்திரி, பாதாம் பருப்பு, ஏலக்காய் இவற்றை வறுத்து, மாவாகத் திரித்து சத்துமாவைச் செய்துகொள்ளலாம். கஞ்சி காய்ச்சிய பின் இனிப்புக்கு பனங்கருப்பட்டி அல்லது கற்கண்டு, சிறிது சுக்குத்தூள் சேர்த்து சூடாக அருந்தக் கொடுக்கவும். அசைவப் பிரியம் உள்ள குழந்தைக்கு, பால் நண்டு சமைத்துக் கொடுக்கலாம்.
உணவு, மருந்துக்கு மாற்றல்ல. மருந்தை விரைவாகப் பணிபுரிய வைக்கவும், நோய் அணுகாமல் தடுத்து வைக்கவும், வந்த நோயை விரைவாக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு விரட்டவும் உணவால் மட்டுமே முடியும். இதை மனதில்கொள்வது நல்லது.

Friday, December 16, 2016

குழந்தையின்மை குறை போக்கும் முருங்கை

முருங்கைக்கீரையில் வைட்டமின் உயிர்ச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. அன்றாட உணவில் முருங்கைக்கீரை, முருங்கைப்பூ அல்லது முருங்கை ஈர்க்கு போன்றவற்றை வெவ்வேறு விதங்களில்
சேர்த்துக்கொள்வதன்மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும். மேலும் கண் கோளாறுகள், பித்தம் சம்பந்தமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். அதுமட்டுமின்றி நமது உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவை வராமல் தடுக்கும் வல்லமை படைத்தது.
குழந்தை பெற்ற தாய்மார்கள்… வாயுவை உண்டுபண்ணக்கூடிய உணவுகளையோ, எளிதில் ஜீரணமாகாத உணவுகளையோ உண்ணும் போது பால் குடிக்கும் குழந்தைகளையும் அது பாதிக்க வாய்ப்புள்ளது. அதாவது, ஜீரண சக்தி குறைந்த – வாய்வு நிறைந்த பாலை அருந்தும் குழந்தைக்கு வயிறு உப்புசம், கல் போன்ற வீக்கம், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது, அப்படிப்பட்ட நேரங்களில் கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை எடுத்து கசக்கி சாறு எடுத்து, வடிகட்டி அதே அளவு கல் உப்பு சேர்த்துக் கரைத்து வெந்நீர் சேர்த்து பாலாடை அளவு குழந்தைக்கு குடிக்க கொடுக்க வேண்டும். குழந்தைக்குப் பிரச்னை அதிகமாக இருந்தால், முருங்கைக்கீரை சாற்றுடன் வசம்புத்தூளை சேர்த்துக் கலக்கி குழந்தையின் தொப்புளைச்சுற்றி பற்று போடுவதன்மூலமும் நிவாரணம் பெறலாம்.
சிறுநீர் கழிக்க முடியாமல் நீர்க்கட்டினால் பாதிப்புக்குள்ளாகும் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருமே முருங்கைக்கீரையுடன் வெள்ளரி விதை சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து தொப்புளில் பற்று போட்டால் நீர்க்கட்டு உடைந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் பகல் வேளைகளில் முருங்கைக்கீரையை பொரியலாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் மறுநாள் முழுநிவாரணம் பெறலாம். முருங்கைக்கீரை மட்டுமல்லாமல் முருங்கை ஈர்க்குகளை (இலையை ஒட்டியிருக்கும் காம்புகள்) ரசம் அல்லது சூப் வைத்து சாப்பிட்டாலும் மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து நிவாரணம் பெறலாம். மேலும், பொதுவாக வாரம் ஒருநாள் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை என சாப்பிட்டு வந்தாலே மலச்சிக்கலில் இருந்து விடுதலை பெறலாம்.
குழந்தையின்மை, ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சமைத்து உண்பதோடு முருங்கைக்காயின் இளம்பிஞ்சுகளை பாலில் வேகவைத்து சாப்பிடுவதன்மூலம் குணம் பெறலாம். முருங்கைப்பூக்களை பாலில் வேகவைத்து சாப்பிடுவது மற்றும் முருங்கைப்பூ பொரியல் சாப்பிடுவதன்மூலமும் மலட்டுத்தன்மையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

எண்களும் உங்கள் எதிர்காலமும்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் போன்று மனிதனின் எதிர்காலத்தை நிர்ணயிக்க எண்கணிதமும் பெரிதும் உதவுகிறது. ஒவ்வொருவரும் தனது ஆதிக்க எண்ணை தெரிந்துகொண்டால், அதன் மூலம் நமது பொதுவான குணநலன்களையும், அதன் அடிப்படையிலான எதிர்கால பலன்களையும் அறிய முடியும்.
ஆதிக்க எண்ணை தெரிந்துகொள்வது எப்படி?: ராசி மற்றும்
நட்சத்திரத்தின் அடிப்படையில் ஆதிக்க எண்ணை கண்டுபிடிக்கலாம்.  உதாரணமாக, ஒருவர் பரணி நட்சத்திரத்தில் மேஷ ராசியில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ராசியில் மேஷம் 1-வது ராசியாகும். நட்சத்திரத்தில் பரணி 2-வது நட்சத்திரம் ஆகும். ராசியின் எண்ணாகிய 1-ஐயும் நட்சத்திரத்தின் எண்ணாகிய 2-ஐயும் பெருக்கி வரும் எண் 2. எனவே, அவர் 2-ம் எண்ணின் ஆதிக்கத்தில் இருப்பவர் என்று தெரிந்துகொள்ளலாம். ராசி மற்றும் நட்சத்திரம் தெரியாதவர்கள், பிறந்த தேதியின் அடிப்படையில் ஆதிக்க எண்ணை தெரிந்துகொள்ளலாம்.
ஒருவர் எந்த தேதியில் பிறந்தாரோ அந்த தேதி எண்ணே அவருக்கு உரிய ஆதிக்க எண்ணாகும். பிறந்தது 3-ம் தேதியெனில் ஆதிக்க எண் 3. பிறந்த தேதி 12 எனிலும் (1+2) ஆதிக்க எண் 3-ஆக அமையும். இனி, உங்கள் ஆதிக்க எண்ணுக்கு உரிய குணங்களையும், பலன்களையும் அறிவோமா?
எண்களும் பலன்களும்…
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் 1-ஆக அமையப்பெற்றவர்களும் இந்த எண்ணைச் சேர்ந்தவர்களே.
சூரியனால் குறிக்கப்படும் எண் 1 ஆகும். உலக வாழ்க்கைக்கு சூரிய சக்தி எப்படி அவசியமோ அப்படியே எண் 1-ஐ சேர்ந்தவர்களும், அவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும், எந்த நாட்டுக்குச் சென்றாலும் முக்கியமான இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றனர். வேலை செய்யும் அலுவலகத்தில் இவர்களே முதன்மையான இடத்தைப் பெற்றிருப்பதையும், அனைவராலும் மதிக்கத்தக்கவர்களாக இருப்பதையும் அனுபவத்தில் பார்க்கலாம்.
1-ம் தேதி பிறந்தவர்கள்:
மற்றவர்களுடைய அபிப்ராயங் களைப் பொறுமையுடன் செவிமடுக்க மாட்டார்கள். எதையும் மறுத்தே பேசுவார்கள். மனதில் உள்ளதை உள்ளபடி பேசுவர். இவர்கள், பிறரை அனுசரித்துச் செல்வது கடினம். தன் விருப்பப்படித்தான் எதுவும் நடக்கவேண்டும் என்று விரும்புவார்கள். அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை இவர்களிடம் காணப்படும். வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற ஆர்வம் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.
10-ம் தேதி பிறந்தவர்கள்:
சாதுவாகக் காணப்படுவர். ரகசியங்களைப் பாதுகாப்பர்.     சமூகத்தில் பிரபலமான நிலையை அடைவர். மற்றவர்களிடம் அன்பும் பாசமும் கொண்டிருப்பர். இவர்களுடன் பழகுவது மிகவும் இனிய அனுபவமாக இருக்கும் என்பதால், அனைவரும் இவரிடம் நட்பு பாராட்டுவர்.
19-ம் தேதி பிறந்தவர்கள்:
சிந்தனை ஆற்றல் உள்ளவர்கள். பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும், காரியத்தில் இறங்கிவிட்டால், எப்படியும் சாதித்துக் காட்டுவார்கள். எந்தக் காரணத்துக்காகவும் தன்னுடைய அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ள மட்டார்கள். இலக்கியத்தில் புலமை உண்டு.
28-ம் தேதி பிறப்பவர்கள்:
பார்வைக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்படுவர். மற்றவர்களுடன் மென்மையாக, சிரித்த முகத்துடன் பேசுவர். இந்த எண்ணில் பிறந்தவர்களிடம் பெண்களின் மென்மையைக் காணமுடியும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: ஒவ்வொரு மாதத்திலும் வரும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான நாள்களாகும். இந்தத் தேதிகளில் சந்தோஷம் தரும் சம்பவங்கள் நடைபெறும். கூடுமானவரை முக்கியமான காரியங்களை 1, 10, 19 ஆகிய தேதிகளில் செய்யத் தொடங்கினால் நல்ல பலன்கள் ஏற்படும்.
28-ம் தேதி தொடங்கும் காரியங்கள் நீடித்து பலன் தரும் என்று சொல்வதற்கில்லை. எனவே, அந்த தேதியில் புதிய முயற்சிகள் எதையும் தொடங்கவேண்டாம்.
தவிர்க்கவேண்டிய தேதிகள்: ஒவ்வொரு மாதமும் 8, 17, 26 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாத நாள்களாகும். இந்தத் தேதிகளில் எந்த புதிய முயற்சியையும் தொடங்காமல் இருப்பது நல்லது. வழக்கமான காரியங்களில் மட்டும் ஈடுபடலாம்.
அதிர்ஷ்ட நிறங்கள்: எண் 1-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்களுக்கு, மஞ்சள் நிறமே மிகவும் அதிர்ஷ்டம் தரும் நிறமாகும். பொன்னிறம் இவர்களுக்கு மகத்தான வெற்றியைத் தரும். வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர்த்தியான மஞ்சள் நிறம் வரை மஞ்சளின் அனைத்து நிறங்களும் பொருத்தமானதே. கறுப்பு மற்றும் பழுப்பு நிறங்களைத் தவிர்க்கவும். இவை, இவர்களுக்கு ஆகாத நிறங்களாகும்.
அதிர்ஷ்ட ரத்தினம்: மாணிக்கம்
வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், சிவபெருமான்
வழிபடவேண்டிய தலங்கள்: 
சூரியனார் கோயில், சென்னை- பொன்னேரி அருகிலுள்ள ஞாயிறு திருத்தலம்.

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறக்கிறவர்கள் இந்த எண்ணால் ஆளப்படுகிறார்கள். சிருஷ்டியில் ஒன்றாக இருந்தது, சலனமடைந்து இரண்டாயிற்று. சலனமடைந்து உண்டானபடியால், ஜல தத்துவமாயிற்று. இதிலிருந்து உண்டானது மனம். இது சந்திரனால் ஆளப்படுகிறது. சந்திரனால் இவ்வெண் குறிக்கப்படுவதால் இவர்களைப் பற்றி பொது ஜனங்கள் பேசிய வண்ணம் இருப்பார்கள். சந்திரன் சுப பலம் பெற்று இருந்தால் நல்லவிதமாகவும் சந்திரனின் ஆதிக்கம் குறைந்து காணப்பட்டால் மாறாகவும் பேசப்படுவார்கள்.
2-ம் தேதி பிறந்தவர்கள்: அதீத கற்பனா சக்தியும், உயர்ந்த லட்சியங்களும் உடையவர் களாகவும், பயந்த சுபாவம் உடையவர்களாகவும், சாந்தமானவர்களாகவும் காணப்படுவர். மனோசக்தி மிகுந்தவர்களாதலால், தீவிரமான கற்பனைகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். சமூகத்தை திருத்தி அமைப்பது பற்றிய புரட்சிகரமான எண்ணங்கள் இருக்கும். தன்னுடைய எழுத்துகளாலும் பேச்சுகளாலும் புரட்சியை உண்டாக்குவர். இவர்கள் சுலபத்தில் கோபத்துக்கு ஆட்படமாட்டார்கள்.
11-ம் தேதி பிறந்தவர்கள்: தெய்வ நம்பிக்கையும் தெய்வ அனுக்ரஹமும் உடையவர்கள். நம்பிக்கையாலேயே எந்தக் காரியத்தையும் மிக எளிதில் சாதித்துவிடுவார்கள். படிப்பு, செல்வம் முதலிய வசதிகள் இல்லாமலிருந்தும், ஆழ்ந்த நம்பிக்கையொன்றையே துணையாகக்கொண்டு மிக எளிய நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலையை அடைவார்கள்.
20-ம் தேதி பிறப்பவர்கள்: 
மிதமிஞ்சின கற்பனாசக்தியும், தெய்வ அனுக்ரஹமும் உடையவர்கள். உலகம் இவர்களை வழிகாட்டியாக எண்ணி வழிபடும். சுயநலமின்றி வாழ்ந்தால், மற்றவர்கள் இவரை தெய்வத்துக்கு நிகராகப் போற்றுவார்கள். சுயநலத்துடன் செயல்பட்டால் கஷ்டத்துக்கு ஆளாக நேரும். இவர்களுக்குப் பேராசை இல்லாமல் இருந்துவிட்டால், மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகக் கூடிய கண்ணியமான வாழ்க்கை அமையும்.
29-ம் தேதி பிறந்தவர்கள்: மற்றவர்களை சிரமப்படுத்துவார்கள். தேவையில்லாமல் சண்டை போடுவார்கள். மற்றவர்கள் தன்னை ஏமாற்றிவிடுவதாகக் கூறுவார்கள். இவர்களிடம் மற்றவர்கள் உதவியை எதிர்பார்க்கமுடியாது. தன்னுடைய காரியத்திலேயே குறியாக இருப்பார்கள். கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் இவர்களுக்குக் கைவந்த கலை. குழந்தைப் பருவத்தில் இருந்தே பெற்றோர்கள் இவர்களைக் கண்காணித்து வளர்க்கவேண்டும். அப்போது இவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 
ஒவ்வொரு மாதத்திலும் வரும் 7,16, 25 தேதிகள், 2-ம் எண் காரர்களுக்கு மிக்க அதிர்ஷ்டமான தினங்கள். எதிர்பாராதபடி அநேக நன்மைகள் ஏற்படும். செய்கிற காரியங்களிலும் தகுதிக்கு மேல் ஆதாயம் கிடைக்கும். சந்தோஷகரமான காரியங்கள் நிகழும்.
தவிர்க்கவேண்டிய தேதிகள்: இவர்களுக்கு 8,9,18,26 தேதிகள் அனுகூலம் இல்லாத நாள்கள் ஆகும். இந்நான்கு தினங்களிலும் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். மேலும் கூட்டு எண் 8 அல்லது 9 வரும் நாள்களிலும் புது முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்: இந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்கு வெளிர் பச்சை வண்ணமே மிக அதிர்ஷ்டமானது. இந்த எண் காரர்கள், தாங்கள் வசிக்கும் வீட்டின் அறைச் சுவர்கள், மற்றும் சுற்றுப்புறம் மற்றும் உடுத்தும் உடை ஆகியன வெளிர் பச்சை வண்ணத்தில் இருந்தால் உற்சாகமும் அமைதியும் உண்டாகும். கறுப்பு, சிவப்பு, ஆழ்ந்த  நீலம் ஆகிய வண்ணங்கள் தீமையை ஏற்படுத்தும் என்பதால் இந்த நிறங்களைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட ரத்தினம்
: முத்து
வழிபடவேண்டிய தெய்வம்: 
பாலசந்திர கணபதி, சிவபெருமான்
வழிபடவேண்டிய தலம்: திங்களூர்

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், 3-ம் எண் காரர்கள். `3′ என்ற எண் சக்தியைக் குறிக்கும். இந்த எண்ணுக்கு உரிய நாட்களில் பிறப்பவர்களில் பெரும்பாலோர் தலைவர்களாகப் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்குக் காரணம், அவர்களுடைய பரோபகார சிந்தையும், தேச முன்னேற்றத்திலுள்ள ஆர்வமுமேயாகும். தியாகி களும், தேசாபிமானிகளும், கப்பற்படை முதலான மிதமிஞ்சின கட்டுப்பாடுடைய ஸ்தாபனங்களின் தலைவர்களும் இவ்வெண் குறிக்கும் தேதிகளில் பிறந்தவர் களாகக் காணப்படுவர். இன்னும் சில அன்பர்கள், வங்கிப் பணியாளர்களாகவும், ஆசிரியராகவும் இருப்பார்கள்.
3-ம் தேதியில் பிறந்தவர்கள்: நல்ல சிந்தனா சக்திகள் உடையவர்களாக இருப்பர். இவர்கள் தெய்வ பக்தியை வளர்த்துக்கொள்வதுடன், உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டும். கலைகளை ரசிப்பார்கள்.  வாழ்க்கை கௌரவமாகவும், உயர்வாகவும் அமையும். மத்திம வயதுக்கு மேல் புகழ் உண்டாகும்.
12-ம் தேதியில் பிறப்பவர்கள்: தன்னலம் இல்லாத உழைப்பினாலும், தியாகத்தாலும் புகழடைவர். வாழ்க்கையே உலக நன்மைக்கான தவமாகத் திகழும். பொதுக் காரியங்களில் ஈடுபட வேண்டும். தியாகிக்கான குணங்களெல்லாம் பிறவிலேயே அமைந்திருக்கும். இளம் வயதிலேயே மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.   
21-ம் தேதி பிறந்தவர்கள்: ஓரளவு சுயநலத்துடன் நடந்துகொள்வார்கள். தாங்கள் செய்யும் தியாகத்துக்குப் பலனை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பொது அறிவை வளர்த்துக்கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். செய்தியாளர் களாகவும், உலகத்தவரின் அபிப்ராயங் களை மாற்றி அமைப்பவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், மன வலிமையால் முன்னேறுவார்கள்.
30-ம் தேதி பிறந்தவர்கள்: தீர்க்க சிந்தனையுடன், நுட்பமான அறிவும் கொண்டிருப்பார்கள். எதையும் தன் விருப்பப்படியே செய்வார்கள். எதையும் கூர்ந்து கவனிப்பதில் வல்லவர்கள் என்பதால், இவர்கள் பெரும்பாலும் உளவுத் துறைகளில் பணி செய்வார்கள். மிகுந்த துணிச்சலும் நெஞ்சழுத்தமும் கூடிய இவர்கள் தோல்வியைக் கண்டு கலங்கமாட்டார்கள். கலைகளில் சுலபமாகத் தேர்ச்சியடையக் கூடிய இவர்கள், தங்களுடைய ஆற்றலை முழுவதும் பயன்படுத்துவார்கள்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 3,9,12,18,21,27,30 தேதிகள் மிகுந்த நன்மை தரும். முக்கிய மான காரியங்களை இந்தத் தேதிகளிலேயே ஆரம்பிக்கவும். நீடித்து பலன் தர வேண்டிய காரியங்களை தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் 3 அல்லது 9 எண் வருவதாக உள்ள தினங்களில் தொடங்கலாம்.
தவிர்க்கவேண்டிய தேதிகள்: 6,15,24 தேதிகள், சில நேரங்களில் சாதகமாகத் தோன்றிப் பின்னர் தீமை விளைவிக்கும். இத்தேதிகள் தடங்கல்களையும், சிரமங்களையும் வாழ்க்கையில் ஏற்படுத்தும். தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் 6 வரும் தினங்களில் பெரிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெளிர் சிவப்பு மற்றும் செந்நிறம் இவர்களுக்கு நன்மை தரும். மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த வண்ணங்களும் நன்மை தரும். கருநீலம், கறுப்பு, ஆழ்ந்த பச்சை ஆகியவை தவிர்க்க வேண்டிய நிறங்கள் ஆகும்.
அதிர்ஷ்ட ரத்தினம்: புஷ்பராகம்
வழிபடவேண்டிய தெய்வம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தி
வழிபடவேண்டிய தலம்: ஆலங்குடி

4,13,22,31 தேதிகளில் பிறப்பவர்கள், இந்த எண்ணின் பண்புகளை உடையவராவர். முதல் மூன்று எண்களும் அறிவு, மனம், இயக்கம் ஆகியவற்றைக் குறிக்கும் என்று சொன்னால், இந்த மூன்று சக்திகளையும் ஒருநிலைப்படுத்தி சமூகத்தை அமைக்கும் எண்ணாக எண் 4-ஐக் குறிப்பிடலாம்.
இந்த எண்ணில் பிறந்தவர்களில் பலரும் வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் புகழ் பெற்றுத் திகழ்வதை அனுபவத்தில் காணமுடிகிறது. மற்றவர்களுடன் வாதம் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவரே. 
4-ம் தேதியில் பிறந்தவர்கள்:
 13,22,31 தேதிகளில் பிறப்பவர்களை  விட மிகுதியான கண்டிப்பு உடையவர்களாக இருப்பார்கள். நல்ல துணிச்சலும் பலமும் இருக்கும். போர் வீரர் போன்று வாழ்வர். வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து, சோர்வடையாமல் இருக்கவேண்டும். அதற்காகவே இவர்கள் தியானம் செய்வதில் ஈடுபடுவது நன்மை தரும். மற்றவர்களிடம் இனிமையாகவும் மென்மையாகவும் பேசவேண்டும். 
13-ம் தேதி பிறந்தவர்கள்: 
திடுக்கிடக் கூடிய சம்பவங்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழும். அபாயங்கள் வந்து நீங்கும். சிறு வயதிலேயே குடும்பத்தில் இவர்களைப் பாதிக்கக் கூடிய மாறுதல்கள் ஏற்படும். மிக்க வலிமையுடைய இவர்கள், நேர்மையாகவும் மறைவில்லாமலும் நடந்துகொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் மிக்க உன்னத நிலையை அடைவர்.
22-ம் தேதி பிறந்தவர்கள்: சந்தர்ப்பச் சூழ்நிலைகள் தவறான பாதையில் வழிநடத்தும். அந்த நேரங்களில் இவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். மற்ற மூன்று தேதிகளில் பிறந்தவர்களை விடவும் இவர்கள் எளிதாகப் பணம் சம்பாதிப்பார்கள். போட்டி பந்தயங்களிலும் பணம் சம்பாதிப்பர்.
31-ம் தேதி பிறந்தவர்கள்:
நல்ல தைரியசாலியாகவும், மிதமிஞ்சின மனோசக்திகளும், சூட்சும அறிவும் உடையவராகவும் இருப்பர். புதிதாகப் பழகுகிறவர்கள் கூட சில நிமிடங்களிலேயே, இவர் சாதாரண மனிதர் அல்ல என்று கண்டுபிடித்துவிடலாம். லாப நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் தன் மனப் போக்கின்படியே செயல்படுவர். ஏகாந்த இடங்களுக்குச் செல்வதிலும், வேதாந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதிலும் ஆர்வம் கொண்டிருப்பர். 
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 1,10,19,28 ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட தினங்களாகும். இதில் 28-ம் தேதி கிடைக்கும் வெற்றிகள் சீக்கிரமே மறைந்துவிடும். 9,18,27 ஆகிய தேதிகள் சாதகமான பலன்களைத் தரும். 1,10,19,28 தேதிகளிலேயே முக்கிய காரியங்களைச் செய்து வந்தால் அதிர்ஷ்டம் விருத்தியடையும்.
தவிர்க்கவேண்டிய தேதிகள்: இவர்களுக்கு 8,17,26 ஆகிய தேதிகளில் எதிர்பாராத சிரமங்கள் வரும். ஆகவே, இந்தத் தேதிகளில் புதிய முயற்சிகள் துவங்குவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம் அல்லது நீலக்கோடுகள் போட்ட துணிகளே இவர்கள் மனதைக் கவரும். பரிசுத்தமான மனம் உடையவர்களாதலால் நீலத்தையே மிகவும் விரும்புவர். வெளிர்நீல நிற ஆடைகள் மனச்சாந்தி தரும். இவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் வண்ணம் மஞ்சள்.
அதிர்ஷ்ட ரத்தினம்: கோமேதகம்
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
வழிபடவேண்டிய தலம்:
 பட்டீஸ்வரம்

5,14,23 தேதிகளில் பிறந்தோரும், பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் 5 எண்ணிக்கை வருவோரும் 5-ம் எண்ணின் ஆதிக்கத்தில் வருவர். மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை இவர்களுக்கு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை சாதாரண நிலையில் ஆரம்பித்தாலும், விரைவிலேயே முக்கியப் பிரமுகராகி புகழ் பெறுவர்.
இந்த எண்ணில் பிறந்த அன்பர்களில் பலரும் தொழிலதிபர்களாக பிரகாசிக்கிறார்கள். இவர்களில் சிலர் இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபட்டு, மற்றவர்களுக்கு குருவாகத் திகழ்கிறார்கள்.
5-ம் தேதியில் பிறந்தவர்கள்: இவர்கள் சிறு வயதில் இருந்தே பெரிய லட்சியங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை வசீகரிக்கும்படியான குணங்களும், பிறரை மதிக்கும் பண்பும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கும். மற்றவர்களுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்லி வழிநடத்துவார்கள். இவர்களில் சிலருக்கு தெய்விகமான வாழ்க்கை அமைவது உண்டு.
14-ம் தேதியில் பிறந்தவர்கள்: பயணம் செய்வதிலும், பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஊக்கமும் பிடிவாதமும் சரிசமமாக இவர்களிடம் காணப்படும். பொருள்களைச் சேர்க்கும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு. வியாபாரத்தில் பெருத்த லாபம் சம்பாதிப்பர். இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தபடி இருக்கும். எனினும் முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கக் கூடாது.
இந்த எண்ணில் பெயர் அமைந்திருக்கும் வர்த்தக நிறுவனங்கள் விரைவிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்துவிடும். பிறந்த தேதியோ அல்லது பெயர் எண்ணோ 14-ஆக அமையப் பெற்றவர்கள் எளிதில் மற்றவர்களின் அபிமானத்தைப் பெற்றுவிடுவார்கள். முகராசி என்று சொல்லுவார்களே அது இந்த எண்ணைச் சேர்ந்தவர் களுக்கு நிறையவே உண்டு.
23-ம் தேதி பிறந்தவர்கள்: இவர்களால் சாதிக்க முடியாதது உலகில் ஒன்றுமேயில்லை. மிதமிஞ்சின ராஜ வசியமும், ஜன வசியமும் இருக்கும். இவர்களை விட மேல்நிலையில் இருப்பவர்களும் இவர்களைப் புகழ்வர். இவர்களுடைய பெயர் மட்டும் சரியாக அமைந்து விட்டால், உலகை ஒரு குடையின் கீழ் ஆளலாம். இவர்கள் மேலான பண்புகளையும், நல்ல நடத்தையையும் கொண்டிருந்தால், சரித்திரத்தில் இடம் பெறும் அளவுக்கு சாதனைகள் புரிந்து, பலரும் போற்றும்படி வாழ்வார்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 5,14,23 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் மற்றபடி தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் 5 என்று வருகிற மற்ற தேதிகளிலும் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு மாதத்திலும் வரும் 5, 9, 14, 18, 23, 27 தேதிகளே அதிர்ஷ்டமான தினங்கள். இந்தத் தேதிகளில் தொடங்கும் காரியங்களில் அபரிமிதமான முன்னேற்றம் காணலாம்.
தவிர்க்கவேண்டிய தேதிகள்: எந்தத் தேதியில் பிறந்தவர்களையும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதால், இந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்கு எல்லா நாளுமே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள்களாகவே அமையும். எனவே, இவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் என்று தனியாக ஒரு தேதியையும் குறிப்பிடுவதற்கு இல்லை.
அதிர்ஷ்ட நிறங்கள்: சாம்பல் வண்ணமே அதிர்ஷ்டமானது. பச்சை, கறுப்பு போன்ற அடர்த்தியான வண்ணங்களை தவிர்த்துவிடவும். இந்த நிறங்களாலான ஆடைகளையும் ஒரு நாளும் அணியலாகாது.
அதிர்ஷ்ட ரத்தினம்:
 வைரம்
வழிபடவேண்டிய தெய்வம்: 
மகாவிஷ்ணு
வழிபடவேண்டிய தலம்: திருவரங்கம், திருவெண்காடு

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசப்படுத்தி ஆளும் திறமை கொண்டவர்கள். எப்படி மற்றவர்களை வசப்படுத்தி தான் சுகமாக வாழ்வது என்னும் கலையைப் பிறவியிலேயே கற்றவர்கள். சுக்கிரனது ஆதிக்கத்தில் பிறக்கும் இவர்கள் அதிகாரம் வகித்தல், அடக்கி ஆளுதல் ஆகிய திறமைகளைப் பெற்றிருப்பார்கள். மற்றவர்கள் மதிக்கும்படியான வாழ்க்கை இவர்களுக்கு அமையும். பிறரை மகிழ்விக்கும் நடிப்பு, நடனம் போன்ற கலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள். இவர்களில் சிலர் ஆன்மிகத் துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அந்தத் துறையில் புகழ் பெற்று விளங்குவார்கள்.
6-ம் தேதி பிறந்தவர்கள்:
 இவர்கள், மிக்க கண்ணியமும் ஊக்கமும் உடையவர்களாக இருப்பர். அடக்கமான சுபாவத்துடன் காணப்படும் இவர்களிடம் ஆழ்ந்த கருத்துகளும் இருக்கும். கலைகளில் சுலபமாக தேர்ச்சி ஏற்படும். பொருள் சேர்ப்பதில் மிகவும் ஆர்வமிருக்கும். இந்தத் தேதியில் பிறக்கும் ஆண்களிடம் பெண்ணின் மென்மை இழையோடிக் காணப்படும். ஆன்மிகம் சார்ந்த பத்திரிகைகளில் இவர்கள் பெயரும் புகழும் பெறுவார்கள்.
15-ம் தேதியில் பிறந்தவர்கள்: மிக வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். எல்லோரையும் வெகு எளிதில் வசப்படுத்தக் கூடியவர்கள். ஆதாயம் வந்துகொண்டே இருக்கும். பிரமிக்கத்தக்க பேச்சாற்றலும் கலைகளில் தேர்ச்சியும் உண்டு. இவர்கள் சாதாரணமாகப் பேசுவதே ஒரு பிரசங்கி பேசுவதுபோல் இருக்கும். எப்போதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவார்கள். இவர்கள் தங்களுடைய பேச்சினால் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். நடிப்பு, நடனம் போன்ற கலைகளில் புகழும் பொருளும் ஈட்டுவார்கள். ஒருசிலர், ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்வதிலும் புகழ்பெற்றுத் திகழ்வார்கள்.  
24-ம் தேதியில் பிறந்தவர்கள்: அடக்கமாகக் காணப்படுவர். மற்றவர்களிடம் நயமாகப் பேசி  காரியங்களை சாதித்துக்கொள்வதில் சமர்த்தர்கள். சமயோசிதமாகப் பேசுவதில் இவர்களை யாராலும் மிஞ்சமுடியாது. இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்குத் துணிச்சல் அதிகம் இருக்கும். இவர்களுடைய மண வாழ்க்கை அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். அரசாங்கத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பெரிய பெரிய பதவிகள் இவர்களைத் தேடிவரும். இவர்கள் எந்த இடத்தில் பணி செய்தாலும், தனக்கு மேல் உள்ளவர்களாலும் பெரிதும் விரும்பிப் பாராட்டப்படுவார்கள். பொதுவாக இவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் கஷ்டங்கள் எதுவும் ஏற்படாது என்பதால், இவர்களுடைய வாழ்க்கை சுகமும் சந்தோஷமும் நிறைந்ததாகவே இருக்கும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: முக்கியமான காரியங்களை 6,15,24 தேதிகளில் துவக்கலாம். இந்த தினங்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் விருத்தியையும் உண்டாக்கும்.
தவிர்க்க வேண்டிய தேதிகள்: 6 என்பது சுக்கிரனின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட எண் என்பதால், குருவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட எண்ணைக் கொண்ட 3,12,21,30 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானவை. இந்த தேதிகளில் முக்கியமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்: இந்த எண் காரர்களுக்குக் கரும்பச்சை, கருநீலம், நீலம், பச்சை மற்றும் சிவப்பு கலந்த வண்ணங்கள் அதிர்ஷ்டமானவை. வெள்ளை, மஞ்சள், வெளிர் சிவப்பு நிறங்களைத் தவிர்க்கவேண்டும்.
அதிர்ஷ்ட ரத்தினம்: மரகதம்
வழிபடவேண்டிய தெய்வம்: 
மகாலட்சுமி
வழிபடவேண்டிய   திருத்தலம்: 
திருவரங்கம்

7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவால் குறிக்கப்படும் 7-ம் எண்ணின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள்.
மனதுக்கு எட்டாத பொருள்களையும், தெய்விகம் பொருந்தியவற்றையும் நம் முன்னோர் ஏழு பிரிவுகளாகப் பகுத்தனர். வாரநாட்களை ஏழு நாட்களாகவும், இசையை ஏழு ஸ்வரங்களாகவும், ரிஷிகள் சப்த ரிஷிகளாகவும், சமுத்திரங்களை சப்த சாகரங்கள் என்றும், கன்னிகைகளை சப்த கன்னியர் என்றும் உலகங்களை சப்த லோகங்கள் என்றும் பகுத்துள்ளனர். இதிலிருந்து எண் 7-ன் சிறப்பை அறியலாம்.
இந்த எண்ணின் அதிபதி ஞானகாரகனாகிய கேது என்பதால், இந்த எண்ணைச் சேர்ந்த அன்பர்களுக்கு இயல்பிலேயே தெய்வ பக்தியும், ஆன்மிகத்தில் நாட்டமும் இருக்கும். ஆனாலும், இவர்கள் மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால் தவறான சேர்க்கையால் பெயரைக் கெடுத்துக்கொள்ளவும்கூடும்.
7-ம் தேதி பிறந்தவர்கள்:  சாந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருப்பர். புத்தி சாதுர்யம் மிக்கவர்களாகத் திகழ்வார்கள். தெய்வ வழிபாட்டில் முழுமையான நம்பிக்கையுடன் ஈடுபடுவர். குழந்தை உள்ளம் கொண்ட இவர்களின் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் இருந்தபடி இருக்கும்.
16-ம் தேதி பிறந்தவர்கள்: 
7, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை விடவும் விசேஷமான மனோசக்தி உடையவர். இவர்களை சரியானபடி வழிநடத்தினால், இவர்களுடைய அபூர்வ சாமர்த்தியங்களை பிரகாசிக்கச் செய்யலாம். இந்தத் தேதியில் பிறந்தவர்களில் பலர் குழந்தைப் பருவத்திலேயே வித்வான்களாகவும் கவிஞர்களாகவும் கலைஞர்களாகவும் பிரபலம் அடைந்திருக்கின்றனர். 
25-ம் தேதி பிறந்தவர்கள்: 
மதப்பற்று அதிகம் கொண்டவர்கள். தாங்கள் கடைப்பிடிக்கும் வழிபாடுதான் சரியானது என்று பிடிவாதமாக இருப்பார்கள். இவரைப் பலரும் பின்பற்றுவார்கள். இந்தத் தேதியில் பிறந்தவர்கள் சபைத் தலைவர்களாகவும், நீதிபதிகளாகவும் திகழ்வார்கள்; மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். இவர்களுக்கும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கவே செய்யும்.
பொதுவாக இந்த எண்ணில் பிறந்தவர்களின் மண வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் மனச் சஞ்சலம் இருக்கவே செய்யும். மேலும் இந்தத் தேதியில் திருமணம் செய்வதுகூட, மண வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தவே செய்யும். 
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 
முக்கியமான காரியங்களை 2, 11, 20, 29 தேதிகளிலேயே செய்துவர வெற்றிகள் கிடைக்கும்.
தவிர்க்கவேண்டிய தேதிகள்: 8, 17, 26 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டம் இல்லாத தேதிகள் ஆகும். தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டி 8, 7 ஆகிய எண்கள் வரும் தேதிகளும் இவர்களுக்கு ஆகாத தினங்கள் ஆகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: இந்த எண் காரர்களுக்கு வெள்ளையே அதிர்ஷ்டமான நிறமாகும். இருந்தாலும் வெளிர் மஞ்சள், வெளிர் பச்சை போன்ற நிறங்களையும் பயன்படுத்தலாம். அடர்த்தியான நிறங்களை தவிர்க்கவேண்டும்.
குறிப்பாக சிவப்பு மற்றும் கறுப்பு ஆகிய நிறங்கள் இவர்களுக்கு ஆகாது.
அதிர்ஷ்ட ரத்தினம்:    வைடூரியம்
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
வழிபடவேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி

8, 17, 26 ஆகிய தினங்களில் பிறந்தவர்களும், பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டி வரும் எண் 8 வரும் தினங்களில் பிறந்தவர்களும் எண் 8-ன் ஆதிக்கத்தில் வருவார்கள். கடுமையாக உழைப்பார்கள். இவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறார்களோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறுவார்கள். பொதுவாக இந்த எண்ணை அதிர்ஷ்டம் இல்லாத  எண் என்றுதான் சொல்வார்கள். ஆனால், இந்த எண்ணில் பிறந்தவர்களில் பலர் சமூகத்தில் உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த எண்ணின் அதிபதி சனிபகவான் என்பதால், மற்றவர்களிடம் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.
அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பிலும், நீதித் துறையிலும் இந்த எண்ணில் பிறந்தவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
8-ம் தேதியில் பிறந்தவர்கள்: அமைதியான வாழ்க்கையையே எப்போதும் விரும்புவார்கள். பலதரப்பட்ட காரியங்களையும் சாதிக்கத் துடிப்பார்கள். மதம், வேதாந்தம், தெய்வ வழிபாடு போன்றவற்றில் இவர்களின் மனம் ஈடுபடும். இவர்களின் உடல் சுகத்தை விரும்பினால், இவர்களின் உள்ளமோ தியாகத்திலும், ஆசைகளைத் துறப்பதிலும் ஈடுபடும். மற்றவர்களுக்கு ஏதாவது உபகாரம் செய்யவேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார்கள். கடுமையாக உழைக்கும் இவர்கள், சமூக நன்மைக்காகப் பாடுபடுவார்கள்.
17-ம் தேதி பிறந்தவர்கள்: வாழ்க்கையின் அடிமட்டத்தில் பிறந்தாலும் எப்படியாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முயற்சி செய்வார்கள். பெரிய அளவில் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். நியாயமான வழியில் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றால், சில தருணங்களில் இவர்களுடைய மனம் தவறான வழிகளில் செல்ல நினைக்கும். அதுபோன்ற நேரங்களில் இவர்கள் மனதைக் கட்டுப்படுத்தவேண்டும். இவர்களுடைய பெயர் எண் மட்டும் அனுகூலமாக அமைந்திருந்தால், ஏராளமான செல்வங்களைச் சேர்த்து வாழ்க்கையில் எல்லாவித சுகங்களையும் அனுபவிப்பர்.
26-ம் தேதி பிறந்தவர்கள்: சுயமாக உழைத்து முன்னேறும் குணம் கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிறு வயதிலேயே ஏதேனும் காரணத்தால் பெற்றோரைப் பிரிந்து வாழ நேரிடலாம். இவர்கள் வாழ்க்கையின் தொடக்கத்தில் கஷ்டங்களும் முன்னேற்றத் தடைகளும் ஏற்பட்டபடி இருக்கும். ஆனாலும், இயல்பிலேயே இவர்களிடம் காணப்படும் கற்பனை ஆற்றலும், நகைச்சுவை உணர்வும் இவர்களின் மனதை சோர்வு அடையச் செய்யாமல் வைத்திருக்கும்.
இவர்கள், மனதை தியானத்தில் ஈடுபடுத்துவது மிகவும் அவசியம். வாழ்க்கையின் முதுமைப் பருவத்தில் இவர்கள் வாழ்க்கையில் செல்வமும் புகழும் சேரும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு 1,10,19,28 ஆகிய தேதிகள் சிறப்பு தரும். மேலும் தேதி, மாதம், வருடம் போன்றவற்றைக் கூட்டினால் கூட்டுத்தொகை 1 வரும் தினங்களும் அதிர்ஷ்டமான நாட்களாகும்.
தவிர்க்கவேண்டிய தேதிகள்: 8,17,26 தேதிகளில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். இந்த தினங்கள், வீண் விவகாரங்களில் ஈடுபடுத்தி தீமைகளை விளைவிக்கக் கூடும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கரும்பச்சை போன்ற நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். கறுப்பு, பாக்கு நிறம் ஆகியன, 8-ம் எண் காரர்களுக்கு ஆகாத நிறங்கள் ஆகும்.
அதிர்ஷ்ட ரத்தினம்: நீலம்
வழிபடவேண்டிய தெய்வம்:  ஆஞ்சநேயர்
வழிபடவேண்டிய தலம்:    சுசீந்திரம், நாமக்கல்

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களும் தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி, 9-ம் எண் வருபவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில் வருவர். எண்களில் மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது இந்த எண்ணே ஆகும். இந்த எண்ணை வேறு எந்த எண்ணால் பெருக்கினாலும் கூட்டுத் தொகை ஒன்பதுதான் வரும். சாதனைகளைச் செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.
செவ்வாயின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு, கோபம் அதிகம் இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆள நினைத்து அதில் வெற்றியும் காண்பார்கள். இவர்களில் பலரும் காவல், ராணுவம் போன்ற துறைகளில் சாதனைகள் புரிந்து புகழ் அடைவார்கள்.
9-ம் தேதியில் பிறந்தவர்கள்: செயற்கரிய காரியங்கள் செய்ய ஆர்வம் உடையவர்கள். நுட்பமான அறிவுத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் மனதில் மேலான லட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு வளமான வாழ்க்கை அமையும். மிகக் கடுமையான எதிர்ப்புகளையும் சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி பெறுவார்கள். இவர்களுக்கு எதிரிகளாலும் அனுகூலமே உண்டாகும். 
18-ம் தேதி பிறந்தவர்கள்: 
இயல்பிலேயே சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களுடைய சுயநலத்தைத் தவிர்த்தால்தான், வாழ்க்கையில் முன்னேற்றமும் நன்மையும் உண்டாகும். இவர்கள் எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்தே எடுக்கவேண்டும். மற்றவர்களுடன் மனக் கசப்பை ஏற்படுத்தும் என்பதால், பழகுவதிலும் பேசுவதிலும் கவனம் தேவை. இயல்பிலேயே கோபமும் பிடிவாதமும் கொண்டிருக்கும் இவர்கள், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டால், நன்மை ஏற்படும். பெரும்பாலும் இந்தத் தேதியில் பிறந்தவர்கள் மன அழுத்தம் உள்ளவர்கள் என்றே சொல்லலாம். வெளிப்படையாக எதையும் பேசமாட்டார்கள். இந்தத் தேதியில் பிறந்தவர்களை மற்றவர்கள் அனுசரித்து நடந்துகொண்டால், இவர்களால் ஆதாயம் பெறலாம்.
27-ம் தேதி பிறந்தவர்கள்: எப்போதும் நல்ல செயல்களையே செய்து, நல்ல பலன்களையே அடைவார்கள். இவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் வெற்றி பெறும். அறிவால் சாதிப்பார்கள். மற்ற இரண்டு தேதிகளில் பிறந்தவர்களை விடவும் இவர்கள் சாந்த குணம் நிரம்பியவர்கள். தீவிர சிந்தனையும், சோர்வில்லாத உழைப்பும் இவர்களை வெற்றியாளர்களாக மாற்றும். பூர்வ புண்ணியத்தின் பயனாக தெய்வ அனுகூலம் இவர்களுக்கு பிறவியிலேயே அமைந்திருக்கும். மற்றவர்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்புகள் இவர்களைத் தேடிவரும். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும், வெகு விரைவில் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடுவார்கள்.
சில தருணங்களில் மென்மையான அணுகுமுறை இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகவே, நேரத்துக்குத் தக்கபடி திட்டமிட்டுச் செயலாற்றினால், எதிலும் எப்போதும் வெற்றியே!
அதிர்ஷ்டம் தரும் தினங்கள்: 9 என்ற எண்ணின் கீழ் பிறந்தோருக்கு 5, 14, 23, 9, 18, 6, 15, 24, 21, 30 ஆகிய தேதிகள், இந்த அன்பர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் தினங்கள் ஆகும். முக்கியமான காரியங்களையும், புதுத் தொழில்கள் துவங்குவதையும் இந்தத் தேதிகளில் மேற்கொண்டால் வெற்றியும், லாபமும் உண்டாகும்.
தவிர்க்கவேண்டிய தினங்கள்: 2,11,20,29 ஆகிய தேதிகள், 9-ம் எண் காரர்களுக்கு அதிர்ஷ்டமில்லாத தினங்கள் ஆகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, கருஞ்சிவப்பு, நீலம் ஆகியவை. வெளிர் பச்சை மற்றும் வெண்மை நிறங்களைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட ரத்தினம்: பவளம்
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

வழிபடவேண்டிய தலம்:  வைத்தீஸ்வரன்கோவில்

Tuesday, December 13, 2016

ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்

தாரிணிக்கு சீரற்ற மாதவிலக்கு, ரத்தக்கசிவு ஏற்பட்டபோது, மனதுக்குள் இனம்புரியாத பயம் ஏற்பட்டது. யாரிடமும் கேட்கவும் டாக்டரிடம் செல்லவும் தயக்கம். தோழிகளிடம் இது பற்றிப் பேசியபோது, அவர்களில் சிலர் தாங்களும் இதுபோன்று பிரச்னையைச் சந்தித்ததாகவும், `மெனோபாஸ்’ எனப்படும் மாதவிலக்கு சுழற்சி நிற்பதன் அறிகுறி இது என்றும் சொல்லியிருக்கிறார்கள். தாரிணியும், தனக்கு வந்திருப்பது மெனோபாஸ் அறிகுறி என்று நினைத்து இருந்துவிட்டார்.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, வித்தியாசம் தெரியவே, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை செய்திருக்கிறார். அவருக்கு பாப்ஸ்மியர் உள்ளிட்ட சில பரிசோதனைகளை டாக்டர் பரிந்துரைத்திருக்கிறார். ரிப்போர்ட் வந்ததும், மருத்துவரை, சந்திக்கச் சென்ற தாரிணிக்கு, கர்ப்பப்பைப் புற்றுநோய் இருப்பதாக சொல்லப்பட அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். `ஆரம்பநிலையில்தான் இருக்கிறது, எனவே, பயப்படத் தேவை இல்லை’ என்று டாக்டர் ஆறுதல் கூறி, அவரைத் தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
கர்ப்பப்பைவாய் புற்றுநோய்
கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியில், வெஜைனாவுடன் இணையும் கர்ப்பப்பை வாய் (Cervix) என்ற இடத்தில் வரக்கூடிய புற்றுநோய். தாம்பத்தியத்தின்போது பரவும் ஹியூமன்  பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus-HPV) காரணமாகவே இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. இதில், 150-க்கும் மேற்பட்ட சாதாரண வைரஸ்கள் உள்ளன. அவற்றில் 15 வகை வைரஸ்களால் கர்ப்பப்பைவாய் புற்றுநோயை உருவாக்க முடியும். அந்த 15 வகைகளில், ஹெச்பிவி 16 மற்றும் 18 ஆகியவை முக்கியமானவை.
ஹெச்.பி.வி வைரஸை, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, தானாகவே அழித்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பெண்களே பாதிக்கப் படுகின்றனர். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் தவிர, மலக்குடல்வாய் புற்றுநோய், தோல் புற்றுநோய் ஆகியவற்றை உண்டாக்கும் ஆற்றல் படைத்தவை இந்த ஹெச்.பி.வி வைரஸ்கள். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், தடுப்பூசி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தடுக்கக் கூடிய ஒரே புற்றுநோய் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய்தான்.
கர்ப்பப்பைவாய் சுவற்றில் உள்ள ஆரோக்கி யமான செல்கள் மாற்றம் அடையும்போது அபரிமிதமான வளர்ச்சியடைகின்றன. இந்த மாற்றத்துக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் காரணமாக இருக்கிறது.
எப்படிப் பரவும்?
உடலுறவின்போது ஹெச்.பி.வி ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும்.
கர்ப்பப்பைவாயில் ஆணுறுப்பின் தோல் உராய்வதாலேயே, இந்த வைரஸ் பரவுகிறது.
ஹெச்.ஐ.வி கிருமியைப் (Human Immuno Deficiency Virus – HIV) போல விந்தணுக்கள் மூலமாகவோ, ரத்தத்தின் மூலமாகவோ இது பரவாது.
பல ஆண்களுடன் உடலுறவு, இளம் வயதில் திருமணம், ஹெச்.ஐ.வி கிருமி தாக்கம் ஆகியவற்றால், ஹெச்.பி.வி கிருமி பரவுகிறது.
வாய்வழி உறவு, பெண்கள் ஓரினச் சேர்க்கை ஆகியவற்றாலும் பரவும்.
ஆரம்ப அறிகுறிகள்…
ஆரம்பநிலையில் அறிகுறிகள் அதிகம் தென்படாத புற்றுநோய்களில் இதுவும் ஒன்று. தொடக்கத்தில் ஹெச்.பி.வி கிருமி, `ஜெனிட்டல் வார்ட்ஸ்’ (Genital Warts) எனப்படும் பாலுண்ணிகளைச் சருமத்தில் ஏற்படுத்தும்.
வெள்ளைப்படுதல், மாதவிலக்குக்கு முன்னும் பின்னும் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு, 40 வயதுக்கு மேற்பட்ட மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களுக்கு ஏற்படும் திடீர் ரத்தப்போக்கு இவையே கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள்.
ஹெச்.பி.வி தாக்கினாலே புற்றுநோய் ஏற்படுமா?
ஹெச்.பி.வி தொற்று, புற்றுநோய் செல்களை உருவாக்கலாம் அல்லது உருவாக்காமலும் போகலாம். ஹெச்.பி.வி கிருமி ஒருவர் உடலுக்குள் சென்று கர்ப்பப்பை புற்றுநோய் செல்களை உருவாக்க, குறைந்தது 10 வருடங்கள் ஆகும். இடைப்பட்ட காலத்தில், இந்த செல்கள் பலவித மாற்றங்களை அடைகின்றன.
நோய் கண்டறிதல் – சிகிச்சை
பாப் ஸ்மியர் (Pap Smear) சோதனை மூலமாகப் புற்றுநோய்க்கு முந்தைய நிலையைக் (Premalignant Stage) கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஆரம்பநிலையில் மிகவும் எளிய அறுவை சிகிச்சைகளே போதுமானது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட செல்களை அகற்றிவிடலாம்.
`ரேடியோதெரப்பி’ எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை மூலமாக கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் செல்களை அழித்துவிடலாம். இந்தச் சிகிச்சையால் மற்ற உடல் பாகங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.
புற்றுநோய் செல்கள் கர்ப்பப்பை முழு வதும் பரவிவிட்டால், கர்ப்பப்பையை நிரந்தர மாக எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
தடுப்பு மருந்துகள்…
கடந்த 10 வருடங்களுக்குள்ளாகத்தான் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பு மருந்துகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கின.
இந்தத் தடுப்பு மருந்துகள், தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்னர், 9-13 வயதுள்ள சிறுமிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். 25 வயது வரை இதற்கான தடுப்பு மருந்துகள் உள்ளன. அதற்கு மேல் அவற்றின் வீரியம் படிப்படியாகக் குறையும்.
நோயின் ஆரம்பநிலையில் சிகிச்சை எடுத்த பெண்களில் 80 முதல் 90 சதவிகிதம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஆண்கள் கவனத்துக்கு…
கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் ஆண்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இவர்களின் அறியாமையால்தான், பல பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். முறையான தாம்பத்தியம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதோடு, ஆண்கள் தங்கள் பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும் அவசியம்.
கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க…
தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
அதிக அமிலத்தன்மை உடைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஒமேகா 3, பாலிஅன்சாச்சுரேடட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீரையே பயன்படுத்த வேண்டும்.
இந்தியப் பெண்களுக்கு மது மற்றும் புகைப் பழக்கம் அதிகம் இல்லை என்றாலும், இந்தப் பழக்கம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
குழந்தைப்பேற்றுக்கு மத்தியில் போதிய இடைவெளி இருக்க வேண்டும். காப்பர் டி உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.
பிறப்புறுப்பை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மாத விலக்கின்போது கட்டாயம் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சானிட்டரி நாப்கின்களின் தரத்தைப் பரிசோதித்து வாங்க வேண்டும். நீண்ட நேரம் சானிட்டரி நாப்கினை வைத்துக்கொள்ளக் கூடாது. 3-4 மணி 
நேரத்துக்கு ஒருமுறை மாற்றவேண்டியது அவசியம்.

கழிப்பறை மற்றும் வசிக்கும் இடத்தில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அறிகுறிகள் காட்டும் வரை பொறுத்திருக் காமல், இந்த நோய் வருவதற்கு முன் காப்பதே சிறந்தது. இளம்பெண்களுக்கு இந்த நோய் வராமல் தடுக்க, திருமணமானதும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு, கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்குத் தடுப்பூசிகளைப் பரிந்துரைக்கிறது. இதற்கான தடுப்பு மருந்து 9 வயது முதல் 13 வயதுக்குள் ஒவ்வொரு சிறுமிக்கும் கொடுக்கப்பட வேண்டும். வளரும் பருவத்தில் அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே, ஒரு டோஸ் மருந்தே போதுமானது.
இந்த வயதைத் தவறவிட்டவர்கள், 13 முதல் 15 வயதுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். 13 வயதுக்கு மேல் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். ஆகையால், இவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் தேவைப்படும். ஒரு ஊசி போட்ட பின்னர், ஆறு மாதங்களுக்குப் பிறகு மற்றொரு ஊசி போட வேண்டும்.

15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 ஊசிகள் தேவைப்படும். இவையெல்லாம் முதல் உடல் உறவு நடப்பதற்கு முன்னரே செய்துவிட வேண்டும். கவனம்… ஹெச்.பி.வி பெருகிவிட்ட பின்னர், தடுப்பு மருந்து பயன்படாது.

திருக்கார்த்திகை தெய்வங்கள்

திருக்கார்த்திகை என்றால் எல்லோருக்கும் திருவண்ணாமலை தீபத் திருவிழாதான் நினைவுக்கு வரும். இறைவன் ஜோதிப் பிழம்பாகத் தோன்றியதும், அம்பிகை ஐயனை வழிபட்டு இடப்பாகம் பெற்றதுமான திருவண்ணாமலை திருத்தலத்தில் அக்னி சொரூபமாகத் தோன்றிய ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிபடுவதுபோல, திருக்கார்த்திகையில் விசேஷமாக விழாக் காணும் தெய்வங்களை இங்கே தரிசிக்கலாமே…
அர்த்தநாரீசுவரர்
ம்பிகைக்கு இறைவன் தனது உடலில் இடப்பாகத்தை அளித்து மாதொரு பாகனாக நின்ற நாள் கார்த்திகைத் திருநாளாகும். அந்த நாளின் இனிய மாலைவேளையில் சிவசக்தியர் இருவரும் ஓருடலாக நின்று களி நடனம் புரிய, அன்பர்கள் அதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருநாளில் மாலையில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும் அவ்வேளையில், ஆலயத்துள் மலையை நோக்கியவாறு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தீபாராதனை செய்யப்படுகின்றது. அதேநேரத்தில், ஆலயத்துள்ளிருந்து அர்த்தநாரீசுவரர் வெளிவந்து கொடிமரத்தின் முன்பாகத் திருநடனம் புரிகின்றார். தீப்பந்தங்களின் நடுவில் நின்று ஆடும் அவரது நடனம் சில மணித்துளிகளே நிகழ்கிறது என்றாலும், கண்ணுக்கும் மனதுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும் சொல்லொணா நிம்மதியையும் அளிக்கின்றது.
அர்த்தநாரீசுவர திருக்கோலத்தை மாணிக்கவாசகர் தொன்மைக் கோலம் என்று போற்றுகின்றார்.


தோலும் துகிலும் குழையும்சுருள்தோடும்
பால்வெண்ணீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வலியும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ

– என்பது அவர் அருளிய திருவாசகப் பாடலாகும்.
வலப்பக்கத்தில் தோலாடையும் இடப்பாகத்தில் பட்டாடையும் உடுத்தி, வலக்காதில் குழையும், இடது காதில் தோடும் அணிந்து, வலப் பகுதியில் வெண்ணீறு பூசி, இடது பாகத்தில் பசும் சாந்தாகிய மஞ்சள் பூசி பைங்கிளி ஏந்தியும், வலதுகையில் சூலமும் ஏந்தி மிகுந்த வலிமை கொண்ட சிவபெருமானின் கோலம் காலம் கடந்த தொன்மையானது என்பது இதன் பொருள். அர்த்தநாரீசுவர வடிவம் இறைவியின் விருப்பால் எழுந்தது. அர்த்தநாரீசுவர வடிவத்தைத் தொழுவதால் இல்லற வாழ்வும் செல்வச் செழிப்பும் உண்டாகும்.
விநாயகருக்கு சஷ்டி விரதம்!
கார்த்திகை தேய்பிறை பிரதமை தொடங்கி மார்கழித் திங்கள் வளர்பிறை சஷ்டி நாள் வரையிலான 21 நாட்கள் நோற்கப்படும் விரதம் விநாயக சஷ்டி எனப்படும் பிள்ளையார் நோன்பாகும்.
ஒரு சமயம் பாண்டவர்கள் பெருந்துன்பத்தை அடைந்து வருந்தியபோது கண்ணபிரான் இந்த விரதத்தைக் கடைப் பிடிக்கும்படி கூறினார். அதன்படி அவர்கள் இந்தப் பிள்ளையார் நோன்பை நோற்று, மேலான பலன்களைப் பெற்றனர். இந்த விரதம் கடைப்பிடிக்கும்போது ஸித்திகளைத் தருவதால் `ஸித்தி விநாயக விரதம்’ என்றும் அழைக்கப்படும்.
கார்த்திகைப் பெண்கள்
ட்சத்திரங்களை விண்மீன் என்பர். கடலில் மின்னிச் சதா சுழன்றுகொண்டிருக்கும் மீன்களைப் போல வானத்தில் பிரகாசித்துக்கொண்டு, இடம் பெயர்ந்துகொண்டே இருப்பதால், நட்சத்திரங்களை விண்மீன் என்று அழைக்கிறோம். கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை இலக்கியங்கள் அறுமீன் என்று அழைக்கின்றன. இந்த மீன்கள் வளர்த்த செல்வனாக இருப்பதால் முருகனுக்கும் ‘மீனவன்’ என்பது பெயராயிற்று.
கார்த்திகை போரைக் குறிக்கும் நட்சத்திரமாகும். வெற்றியை விரும்புபவர்கள், கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை  வணங்கி விரதமிருந்து வழிபடவேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
கார்த்திகேயன்
முருகப்பெருமானின் வளர்ப்புத் தாய்மார்களான கார்த்திகைப் பெண்கள், நம் இல்லங்களுக்கு வருவதைப் பெண்கள் விளக்கேற்றி வரவேற்பதே தீபத் திருவிழாவாகும் என்பர் சிலர். அவர்களுடன் முருகனும் வருகிறான். அவர்கள் நமக்கு வாழ்வில் வளமையையும் செல்வத்தையும் தருகின்றனர்.
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதாலும், கார்த்திகா வான துர்கையின் புதல்வன் ஆதலாலும், முருகனுக்குக் கார்த்தி கேயன் என்பது பெயராயிற்று. வடநாட்டில் முருகனைக் கார்த்திகேயன் என்ற பெயரில் வழிபடுகின்றனர். கிருத்திகா புத்திரன், கார்த்திகை மைந்தன் என்ற பெயர்களும் அவருக்கு வழங்கப்படுகின்றன.
கொற்றவை… தாரா பாத்திரம்…

கார்த்திகை நட்சத்திரத்தை ஜோதிட நூல்கள் அக்னி நட்சத்திரம் என்று கூறுகின்றன. இந்த நட்சத்திர மண்டலத்தைச் சூரியன் கடக்கும் வேளையில் வெயில் அதிகமாக இருக்கும். நெருப்புக்கோளக் கிரகமான சூரியனும் அக்னி வடிவான இந்த நட்சத்திரக் கூட்டமும் சேர்ந்திருக்கும் காலத்தில், வெயில் அதிகமாக இருக்கும். அதையே அக்னி நட்சத்திரம் என்று கூறுகின்றனர். அப்போது வெம்மையைக் குறைக்க வேண்டி, சிவலிங்கத்துக்கு மேல் ‘தாரா பாத்திரம்’ அமைப்பதும், தயிர் சாதம் நிவேதிப்பதும் நிகழும்.

கொற்றவையாகிய துர்கைக்கும் கார்த்திகா என்பது பெயர். துர்கை அக்னி மண்டலத்தில் வீற்றிருப்பவள். அக்னி மயமானவள். அதனால், அவள் கார்த்திகைப் பெண்களுக்கு நடுவே அக்னி துர்கையாக வீற்றிருக்கிறாள்.

யோக நரசிம்மர்
யோக நரசிம்ம சுவாமி வீற்றிருக்கும் திருப்பதிகளில் சோளிங்கர் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. சோளிங்கர் என அழைக்கப்படும் சோழசிங்கபுரம் நரசிம்மர் பெயரால் அமைந் ததாகும். இங்கு இரண்டு மலைகள் உள்ளன. பெரிய மலைமீது நரசிம்மசுவாமி யோக நரசிம்மராக விளங்குகிறார். பின் கரங்களில் சங்கு, சக்கரம் விளங்க, முன் கரங்களில் சிம்மகர்ண முத்திரைகளைக் கொண்டுள்ளார்.
இவருக்கு நேர் எதிரிலுள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் உள்ளார். இவர் நான்கு கரங்களுடன் சதுர்புஜ ஆஞ்சநேயராகக் காட்சியளிக்கின்றார். இது சிறந்த பிரார்த்தனைப் பதியாகும். இது முன்னாளில் `கடிகை’ என்று அழைக்கப் பட்டது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டது. கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் விழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றனர்.
சூரிய தேவன்
கார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால், `விருச்சிக மாதம்’ என்பர். இந்த வீடு அனல் கிரகமான செவ்வாயின் வீடாகும். சூரியனுக்கு இம்மாதத்தில் வழிபாடு செய்வதால் பரம்பரைச் சொத்துக்களால் பயன் உண்டாகும். அவை நம்மை விட்டுப் போகாது. கண் சம்பந்தமான நோய்கள் அணுகாது. பார்வையின் சக்தி மேம்படும்.
கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவது, ஜோதிர் லிங்கங்களை வழிபடுவது முதலானவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கின்றன.
காஞ்சிபுரத்திலுள்ள ஜோதி லிங்கமான கச்சபேசப் பெருமானை வழிபடுவது, மிகுந்த பலன் தரும். கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை களில் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் மூழ்கி, அதன் கரையிலுள்ள இஷ்டலிங்கப் பெருமானையும், கச்சபேசப் பெருமானையும் வழிபட்டால், நினைத்த காரியம் நல்லபடியே நடக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஏராளமான மக்கள் கார்த்திகை ஞாயிறு வழிபாட்டை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவு மக்கள் கூடி வழிபடுகின்றனர். இம்மாதத்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கச்சபேசப் பெருமான் வீதிகளில் பவனி வந்து அருள்பாலிக்கின்றார்.

நாமும் புண்ணியம் மிகுந்த கார்த்திகை மாதத்தில், இந்தக் கார்த்திகை தெய்வங்களை வழிபடுவோம்; திருவருள் பெற்று சிறப்புற வாழ்வோம்.

Monday, December 12, 2016

உப்பு ஏற்படுத்தும் விளைவுகள்


Image result for salt


உயர் ரத்த அழுத்தம் அதிக சோடியம் உடம்பில் சேர்ந்தால், அதைக் கரைப்பதற்காக அதிக நீர் உடம்பிலேயே தங்கிவிடும். இதனால் செல்களைச் சுற்றி, திரவமும் ரத்தத்தின் அடர்த்தியும் அதிகரிக்கும். அதிக அடர்த்தியான ரத்தத்தை, ‘பம்ப்’ செய்ய இதயம் கூடுதலாக
வேலை செய்ய வேண்டும். தொடர்ந்து இப்படியே அதிக அழுத்தம் இருந்தால், ரத்த நாளங்கள் கடினமாகி உயர் ரத்த அழுத்தம் வந்துவிடும்.ஆஸ்டியோபோரோசிஸ்அதிகப்படியான உப்பு, சிறுநீர் வழியே வெளியேறும் அதனோடு சேர்ந்து கால்சியமும் வெளியேறிவிடும். இதனால் எலும்புகள் வலுவிழந்து உடையும்.